மதுரை ராஜாஜி மருத்துவமனை கழிவறையில் ஆக்சிஜன்;கெத்துகாட்டும் டீன் சங்குமணி!


கொரோனா நோயாளிகள் கழிப்பறையில் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் நோயாளிகளுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதாக டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். 


கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு திடீர் என்று உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது அதிகரித்து வருகிறது. அதிலும் பலருக்கு அதிகாலை நேரங்களில் ஆக்சிஜன் அளவு குறைகிறது.


ஹைபாக்சியா எனப்படும் இந்த பாதிப்பு காரணமாக பலர் இறப்பதும் வழக்கமாகி வருகிறது.அதேபோல் பொதுவாக கொரோனா நோயாளிகள் கழிப்பறை செல்லும் போது அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவது வழக்கமாகி வருகிறது. இதனால் அவர்கள் உள்ளேயே மயக்க மடைகிறார்கள்.


குறிப்பாக மிதமான மற்றும் அறிகுறி இல்லாத நோயாளிகள் கழிப்பறைக்கு செல்லும் போது மூச்சு திணறல் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதால் கொரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. .

கழிப்பறைகளின்  உள்ளேயே ஆக்சிஜன் குழாய்கள் வைக்கப்பட்டு, கழிப்பறை வாசலிலும், உள்ளேயும் குழாய் பொருத்தப்பட்டு  ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. கழிவறையில் ஆக்சிஜன் குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மக்கள் இடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.